தமிழன் என்று சொல்லடா...
எதனாலிந்த வழக்கம்
ஏனிந்த பழக்கம்
என்ற கேள்வி ஏனடா!
பழக்கமது தவறென்றால்
மாற வேண்டும் தானடா?
வீறு கொண்ட தமிழா
விலங்கைத் தின்பதேனடா?
வள்ளுவரின் வாக்கினை
வாழ்வில் கடைபிடியடா!
குட்டிப்புழுவைக் கொன்றெடுக்கும்
பட்டுத்துணி தேவையா?
அப்படியென்ன நாமெல்லாம் ஆண்டவரா சொல்லடா?
புழுவை விட சேவை,
என்ன செய்தோம் பூமிக்கு?
அனைத்துயிர்க்கும் அன்பென்றான்
அந்த நாளில் பாரதி,
எந்த நாளும் சிந்தையிலே கொள்ளடா நீ அதை!
சின்னஞ்சிறிய சிறகெடுத்து
சிந்தைக்கெட்டா தூரஞ்சென்று,
சொட்டு சொட்டாய் தேனெடுக்கும் தேனீதனை துரத்திவிட்டு,
ராணித்தேனீ காலொடித்து,
தேன் குடிக்கத்தேவையென்ன
வந்ததிங்கே இப்பொழுது?
வாடிப்போன பயிருக்காக
வாடிப் பாடிய வள்ளலார், விளம்பியதென்ன சொல்லடா?
ஜல்லிக்கட்டுக் காளையை அள்ளிக்கட்டும் வீரத்தமிழா
வீரமென்றால் என்னவென்று வினவுகிறேன், சொல்லடா?
வயதேறிப் போனாலந்த
காளை செல்வதெங்கடா?
இறுதி வரை வைத்திருந்து
உணவளிக்கும் குணமது-
அதுவும் அறம்தானடா
உணரவேண்டும் நீயடா!
உண்மை வீரம் என்னவென்று
சொல்கிறேன் கேளடா,
காளையதன் வாழ்வை நிம்மதியாய்த் தான் வாழ,
கட்டி வைத்த கயிற்றினை
வெட்டி எறி தமிழா.....
காளையைக் - கட்டி வைத்த கயிற்றினை வெட்டி எறி தமிழா!
உண்மை வீரம் என்பது
உயிர் நேயம் என்பதே
உணரவேண்டும் நாமடா!
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
உலகிற்கு வழிகாட்ட வாருங்கள் தமிழர்களே!
தமிழ்நாட்டில் ஒரு வழக்கம் - 'தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா' என்ற வரியை அடிக்கடி பேச்சு வழக்கில் கூறுவது. 'எங்கள் நாடு பல ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பே முன்னேறிய நாடு, நீங்கள் எல்லாம் காட்டுவாசிகளாக சுற்றிக்கொண்டிருந்த போது நாங்கள் நாகரீக மனிதர்களாக இருந்தோம்' என்று பெருமையடித்துக் கொள்கிறோம் அடிக்கடி, மேலை நாடுகளை பார்த்து.
இன்று அவர்கள் எல்லாம் நாகரீகத்தை நோக்கி செல்ல முயலுகிறார்கள்,( இன்னும் செல்லவில்லை ) அவர்கள் பின்னாடி நாம் செல்கிறோம் அநாகரீகமான மனிதாபிமானமற்ற பழக்கவழக்கங்களில்.
உலகமெல்லாம் உயிர்நேய நற்சைவமாக மாற சில எதிர்ப்புகள் கிளம்பிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் தமிழர்கள் நாம் என்ன செய்யலாம்? நற்சைவமுறையில் வாழ்க்கையை மாற்றி முன்னோடிகளாகத் திகழலாம்!
அதில் என்ன தடை?
எந்தத் தடையும் இல்லை, நம்முடைய தனிப்பட்ட அகோர உணவுப் பழக்கங்களை தவிர.....
Comments
Post a Comment