புலியும் முறமும்
புலியும் முறமும்
வீரத் தமிழ்நாட்டில் சங்கத்தமிழ் காலத்தில்,
முறத்தால் புலியை
அடித்து விரட்டினாள்
தனியாய்ப் பெண்ணொருவள்!
தீரப்பெண்ணவள்
விரட்டிய புலியது
வந்ததேன் நம் வீட்டுக்குள்?
தானே தான் வந்ததா?
புலியின் காட்டில்
புல்லை வெட்டி
மானை விரட்டி,
மனிதன் கட்டிய வீட்டில்,
தன் இருப்பிடம் தேடி
வந்ததா?
கொஞ்சம் கொஞ்சம் முன்னேறி காட்டின் ஓரம் சென்றோம்,
இன்னும் கொஞ்சம் முன்னேறி காட்டினுள்ளே செல்கின்றோம்,
இப்படியிந்த முன்னேற்றத்தால்
காடே இல்லையாம் பின்னாளில்...
புலியும் யானையும்
போவதெங்கே காடுகள் இல்லா போனாலே?
விலங்கின் காட்டின் உள்ளே, வீட்டைக் கட்டி நாம் போவோம்,
தம் இல்லம் தேடி அவை வந்தால்,
முறமிருக்கு அடிக்கவே
மின்சாரம் இருக்கு கொல்லவே!
அறிவுகள் ஆறு உள்ளன
நியாய தர்மம் இல்லையே?
மண்ணில் மனிதன் முக்கியம் மனிதன் மட்டுமே முக்கியம்,
என்ற எண்ணம் மாறி
எல்லா உயிரும் தேவையென்ற நிலைப்பாடென்று வருதோ அன்றே பூமி மீண்டும் மலரும்!
👇🏼
Man animal conflict என்ற தலைப்பில் அடிக்கடி செய்தித்தாள்களில் கட்டுரைகள் வந்து போய்க்கொண்டிருக்கின்றன.
முன்பெல்லாம் நான் அவற்றைப் படிக்கும் பொழுது நினைத்துக்கொள்வேன் என்னடா இது இந்தக் காலத்தில் இவ்வளவு தூரம் விலங்குகள் நம்மால் கஷ்டப்படுகின்றன என்று .
நாம் இன்று காடுகளை அழித்து மரங்களை வெட்டி முழுதும் மரத்தால் அலங்கரிக்கப்பட்ட வீடுகளை கட்டிக் கொள்கிறோம். அதுவும் பெரிது பெரிதாகக் கட்டி அதில் இரண்டொரு மனிதர்கள் மட்டும் வாழ்கிறோம்.
கிட்டத்தட்ட நம் தேவையைப் போன்று பத்து மடங்கு அதிக அளவு வீடு கட்டுகிறோம்.
இதுபோன்ற வீடுகளை கூட்டிப் பெருக்குவதற்காக இரண்டு ஆட்கள் நியமிக்கிறோம்.
இதுபோன்ற வீடுகள் பூமிக்கு மட்டுமல்ல நாளடைவில் வயதாகும் பொழுது நமக்கே பெரும்பாரம் என்று நினைத்துப் பார்த்து தேவைகளை முடிந்த அளவு குறைத்து 'சிறுகக் கட்டிப் பெருக வாழ்' என்ற கொள்கை இருந்தால் நம் வாழ்வும் மகிழ்ச்சியாக ஆகுமோ என்ற எண்ணம் எனக்கு சில நேரங்களில் வரும்.
காடுகளை அழிக்கும் பொழுது வேறு வழியே இல்லாமல் விலங்குகளுக்கும் நமக்கும் ஒரு போராட்டம் நடக்கிறது. கண்டிப்பாக நாம் தான் வெல்கிறோம்.....
இத்தகைய குணம் ஆதிகால மனிதன் தோன்றிய காலம் தொட்டே நம்மிடம் இருக்கிறது என்றுதான் எனக்குப் படுகிறது. அன்று காடுகளின் முக்கியத்துவம் அறியாமல் இருந்த பொழுது நாம் செய்தோம், காடுகளை அழித்து நகரங்கள் வளர்வது என்பது பெரும் முன்னேற்றம் என்று நினைத்திருந்தோம்.
ஆனால் இன்று ஓரளவு நமக்கு விழிப்புணர்வு இருக்கிறது காடுகள் தேவை என்று அறிகிறோம். இந்தக் காலகட்டத்தில் நாம் இனிமேலாவது காடுகளுக்குள் செல்வதைத் தவிர்த்தால் மற்ற உயிர்கள், காட்டு விலங்கினங்கள் வாழ்வதற்கு ஏதுவாக இருக்கும். காடுகளுக்குள் விடுமுறைக்காக கூட நாம் செல்வது மிகவும் தவறு என்பது என்னுடைய கருத்து. forest resort என்ற பெயரில் நடத்தப்படும் இடங்களுக்கு போவது பெரும் குற்றம் என்று தான் நான் நினைக்கிறேன்.
Resort சூழல் வேண்டுமென்றால் அவரவர் தத்தம் வீடுகளை சுற்றி மரங்களை வைத்து காடு போன்ற சூழல் அமைப்பது இன்னும் சிறப்பாக இருக்கும்.
இலை விழுகிறது குப்பை விழுகிறது என்ற காரணங்களால் எல்லாம் மரத்தை வெட்டுவது நடக்கிறது.
கொஞ்சம் மரியாதைக்குறைவாக சொல்வதென்றால் இந்த எண்ணம் ஒரு பெரிய முட்டாள்தனம் என்று தான் கூறுவேன்... சுத்தத்திற்கும் இதற்கும் சம்பந்தமே கிடையாது.
Comments
Post a Comment