வாழ விரும்பும் விலங்கு
விலங்கினை வெட்டாதே வெட்டியதைத் தின்னாதே
விலங்குவதை வேண்டாம், அதை வாதிப்பதை நிறுத்துங்கள்..
என விரும்பிக் கேட்டுக் கொண்டாலுடனே..
'தாவர இலையில் மரத்தில் செடியில்
காயில் பூவில் பழத்தில்
மட்டும்
இலையா உயிரெ'ன திருப்பிக் கேட்கும்
நடிப்புத் திலகம்!
துடிக்கும் விலங்கின் வேதனைக்கதறல்,
தப்பியோடப் பார்க்கும் கால்கள்,
தப்பென்ன செய்தேன் நானென்று
விட்டு விடுங்கள் என்னை என
இறைஞ்சிக் கேட்கும் கண்கள்,
அம்மா என கத்தும் சத்தம்,
நடுங்கும் உடலின் பயத்தின் வாசம்,
குருதிப்புனலின் ரத்த வாடை....
இதையெல்லாம் உணரா நீவிர்,
கண்ணில் காதல் மூக்கில் எதிலும் என்றும் நம்மால் உணர இயலா
தாவர வலியை உணர்ந்தீரா?
விலங்கின் சதையதை விரும்பி உண்பேன்
விட முடியாது பலநாள் பழக்கம்
என்றுரைத்தால் தவறில்லை,
மெய்யுரை எண்ணி வணங்கி நிற்பேன்!
அன்றில் இலைக்கும் செடிக்கும் வலியுண்டென
சாக்கு போக்கு காரண காரியம்
அனைத்தும் கலந்த பாசாங்கு....
நம்புவதெப்படி சொல்லய்யா?
Comments
Post a Comment