அழகு
அழகு
கோடிக்கணக்கில் உயிரைக்கொன்று
கட்டி எழுப்பிய கோட்டை,
ஆசையில் அனைவரும்
விரும்பிக் கட்டும்
பட்டெனும் பகட்டுக்கோட்டை!
சிற்சில நேரம் உடுத்திவிட்டு சட்டென வீசி எறிந்துவிடும்,
பட்டுப்புடவை ஆசைக்காக,
செத்து மடியும் பல கோடி உயிரை
சிந்திக்கவேண்டும் சின்னத்தங்கம்!
வினாடி ஆசை நமக்கது
வாழ்க்கை போவது புழுவுக்கு,
வினாடி ஆசையில்
வீழ்கிறது
பாவம் அறியாப் புழுவின் வாழ்வு!
பருத்திப் புடவை உடுத்தி சென்றால்
பளபளப்பில்லை என்பது குறை!
பட்டினும் விலை குறைந்தது
பட்டைப் போல மின்னும்
செயற்கைப் பட்டு புடவை! உடுத்திச்செல்வதிலென்ன
குறை?
குறைந்த விலை ...அதே குறை!
பணத்தைக் கொட்டி பளபளப்பாக
மின்னிக்கொண்டு நாம் செல்ல,
பல்லாயிரம் பட்டுப்பூச்சிகளைக்,
கொன்று குவிக்கும் நாமெல்லாம்
அரக்கரன்றி யாரம்மா?
🤔🤔🤔
அழகு
ஒரு சுமார் இருபது வருடங்கள் முன்பெல்லாம் திருமணம், நிச்சயம், சிறுமிகளுக்கு நடத்தப்படும் சீர், போன்ற வைபவங்களுக்கு நான் சென்று கொண்டிருந்த காலங்களில், போகும் பொழுது ஒரு 'ஸ்டார்ட்டிங் டிரபிள்' எனக்கு எப்பொழுதுமே இருக்கும். கூட்டங்களை அவ்வளவாக நான் விரும்புவதில்லை, என்னுடைய இயல்பு இது என்று நினைக்கிறேன். இருந்தாலும் சென்றபிறகு பிறகு நான் அந்த சூழ்நிலையை மிகவும் ரசித்து 'என்ஜாய்' செய்வேன். 'ஃபிரண்ட்ஸ்' அல்லது உறவினர் ஆகியோருடன் உரையாடுவது மற்றும் அந்த வைபவங்களில் கொடுக்கப்படும் நல்ல விருந்துகள் அவை எல்லாம் எனக்கு மிகவும் பிடிக்கும்.
இன்னும் சிறுவயதில் பட்டுப்புடவை கட்டி நகை போட்டுக் கொண்டு லேசான ஒப்பனையுடன் அழகுபடுத்திக் கொண்டு செல்வதும் எனக்கு பிடித்து இருந்தது.அதைவிட அனைவரும ' ஹை, யூ லுக் ஸோ குட்' என்று கூறுவதைக் கேட்க இன்னும் பிடிக்கும்.
ஆனால் அந்தப் பட்டு புடவைகளை கட்டிக்கொண்டு சில மணி நேரங்கள் கழித்து அது பாரமாக நம் இடுப்பின் ( இளமைப்பருவத்தில் அது இருந்தது 😐 ) மீது அமர்ந்துகொண்டு வெயில் மற்றும் வியர்வை கசகசப்பு அதிகமாக, எப்போதடா அந்த புடவையை கழற்றி எறிவோம் என்று எதிர் நோக்க ஆரம்பித்து விடுவேன். வீட்டிற்கு வந்தவுடன் அதைக் களைந்து விட்டு, நகைகளையும் களற்றிவிட்டு, ஒரு நூல் புடவை மாற்றிக்கொண்டு வரும் சுகம் இருக்கிறதே....அதுதான் சுகம்.
இப்பொழுது தோன்றுகிறது அவ்வளவு சிரமப்பட்டு எதற்காக அந்தப் புடவையை
க்கட்ட வேண்டும் என்று...
கட்டும் நமக்கும் சௌகரியம் இல்லை, புடவை உருவாவதும்
உயிரைக் கொல்லும் காரியத்தின் அடிப்படையில்.
எந்த விதத்திலும் நன்மை இல்லாத இந்தப் பட்டு என்கிற பகட்டான ஆடையை ஏன் கட்டுகிறோம்?
காலங்காலமாக வந்துவிட்ட வழக்கமும், அது அழகாகத் தோன்றுகிறது என்ற ஒரு பிரமையும், எல்லாவற்றிற்கும் மேல் அதை புனிதம் என்றும் திருமணம் போன்ற வைபவங்கள் அது இல்லாமல் நடக்கக் கூடாது என்பது போலும் சமீப காலங்களில் உருவாக்கப்பட்ட ஒரு மாயையும்தான்.
எந்த உடையாக இருந்தாலும் அணிந்திருக்கும் பாங்கிலும் பார்க்கும் கண்களிலும் இல்லையா அழகென்பது?
Comments
Post a Comment