நின்னு போன நெஞ்சு
நின்னுபோன நெஞ்சு
சில நாட்களுக்கு முன் என்னைப் போன்ற ஒரு பெண்மணி கூறிய விஷயங்கள்:
ஏனுங்கோவ்.. எனக்கு ஒரு சந்தேகமுங்க... இந்தக் கம்ப்யூட்டர் வந்ததனாலே,
காயதம் யூஸ் பண்றதல்லாங் கொறைஞ்சு போச்சுன்னு சனம் பேசுதுங்க?
ஆனாலுங்க எனக்கென்னமோ, இப்ப எச்சாத்தே யூஸ் பண்ணறாப்பல இருக்குதுங்க.
அன்னிக்கொருநாளு பேங்கில போய்யுங்க, ஆடிட்டரு கேட்டாருன்னு ஸ்டேட்டுமென்டு வாங்கீட்டு வல்லாமுன்னு போனமுங்க!
அங்க அவிய அதைய எடுத்துக் குடுத்ததப் பாத்து ஒரு நிமிசொ
என்ற நெஞ்சு நின்னுறுச்சுங்க!
.
ஒரு கொயரு பேப்பரு....அதுமு நல்ல அகலமுங்க....கத்த கத்தயா மிசினிலிருந்து உளுகுது!
அட ஆமாங்கனே கத்த கத்தயாத்தே......
என்ற ஒரு ஆளுக்கு...... அதும்மு பேங்கில கணக்கு வளக்கெல்லாம் பெருசா எதுமில்லாத ஆளுக்கு குடுக்கிற பேப்பரூ.......அதுக்கு எத்தனை மரம்போச்சுன்னு தெரிலீங்க!
ஏனுங்க.....! இந்த பாங்கில அச்சடிக்கிற மிசினோட ஸாப்ட்டுவேரே மாத்தி....ஒரு ரண்டு பேப்பர்ல குடுக்கறாப்பல பண்ண முடியாதுங்களா?
அதென்ன அவ்வளவு கஸ்டமா?
'சுற்றுப்புறச்சூளலு சுற்றுப்புறச்சூளலு'ன்னு
ஊரெல்லாஞ்சனம் பேசுது....
பாங்கி இன்சார்ச்சோட காதுல உளுகிலயாட்ட இருக்குது!என்னென்னமோ சர்வதேச விசயமெல்லாம் பேசறாங்க...... அடிப்படையில கோட்டையுடுறாங்க போங்க!
ஆனா இதில உன்னொரு விசயம் இருக்குதுங்க.... எனக்கிந்தக் கத புஸ்தகம் படிக்கறதுன்னா ரொம்பப் புடிக்குமுங்க.... எங்க வீட்டுக்காரரு 'கிண்டிலு'மிசினு வாங்கிக் குடுத்தாருங்க... ஆனா என்னால அதுல படிக்க முடியிலீங்க. கையிலஒரு புஸ்தகத்தைப் புடிச்சு படிச்சாத்தேன், படிச்சு மாரி இருக்குது....... மாறோனும்னுதேன் பாக்கறேன்.... முடிய மாட்டேங்குதே!
அப்பொறம், அடுத்த விசயத்துக்கு வர்லாம்ங்க.....
எல்லாரும் சுற்றுலா போறமுன்னு வெளிநாடு போறாங்களுங்க.
அங்க போய் சுத்தி பாத்துட்டூ.... கம்முனு வர வேண்டியதுதேனோ?
புலிக்கூடப் படமெடுக்கிறேன், சிங்கத்துக்கூடப் படமெடுக்கிறேன்னு போற சனமெல்லாமஞ் சொல்றதுனால, யானெ சிங்கொம் புலின்னு காட்ல சிவனேன்னு ராசாங்கமா அதுபாட்டுக்கு இருந்த வெலங்கயெல்லாம் கூண்டுக்குள்ள ஆயுசுபூரா அடைக்கறாங்க...ஒரு சிங்கக்குட்டி கால, அதுகீது தப்பிச்சு ஓடீரும்மின்னு, முறிச்சு ஓட உடாம செஞ்சசருக்கராங்க ரஸியாவுலே, நம்மளயாட்ட சுற்றுலா போறவியெல்லாம் அது கூட நின்னு படமெக்கிறதாமா..!
அந்த இரும்பு மனுசன் புட்டினே 'சாக்காகி'ப்போயி தீவரமா விசாரிக்கோனும்னு சொல்லிட்டாராமா.
இதெல்லா பேஸ்புக்ல போடுறாங்களுங்க....பேஸ்புக்கு பாதி பொய்யி பாதி நெசந்தானுங்க....
ஆனா சுற்றுலா போறதும்மு நெசம், வெலங்கோடப் படமெடுக்கிறதும்மு நெசம்!
அந்த சிங்கக்குட்டி படத்த பார்த்துங்கோ... எனக்கு மறுபடியுமு நெஞ்சு நின்னு போச்சுங்கோ! மறுக்கா ஓடறதுக்கு வெகு நேரமாச்சு.
பூமியில அல்லா உயிருக்குமு இருக்குர ஏளறிவு ... மனுசனாப் பொறந்தாக் கொறஞ்சுபோயி ஆறு ஆயிருமாட்டிருக்குது.
நம்மளையாட்டத்தேனொ, அதுமொரு உசிருன்னு ரோசனையே வராதுங்களா?
எனக்கென்ன தோணுதுங்ன்னா....இந்தப் பளமொளியெல்லாஞ் சொல்லிச்சொல்லி சிலநேரொம் புத்தியே கெட்டுப்போகுதுன்னு...
'கொன்னா பாவம் தின்னா போச்சு'ன்னு சொல்றாங்க....
அதோட அர்த்தமந்து.. 'கொன்னாரு பாவம் தின்னாருக்குப்போகுமுன்னு'.. அப்பிடீன்னதாஞ் சொல்றாங்க.. அந்தஅர்த்தத்த அனர்த்தம் பண்ணீட்டமோ என்னமோ?
எது நெசமுன்னு காண்கறது?
பளசென்ன புதுசென்ன,எந்தமொளி என்ன வேன்னாச் சொல்லீட்டுப் போகுட்டூ..... நமக்கொரு சொந்த புத்தி இருக்குதல்லங்கோ? சிந்திக்கோனுமா வேண்டாமா?
🌾🍁🍂🍀☘️🌿🌱🌳🌴🌵🌀
அவருக்காக நான் எழுதிய சில வரிகள் 👇
🤷🐜🙈 🤷🐜🙈 🤷🐜🙈
ஆயிரம் எறும்பாய் இருந்தாலும்
அனைத்துமொன்றாய்ச் சேர்ந்து
ஓருயிர் போல காரியம் செய்யும்,
எறும்புக்குள்ளும் பல உண்டு சமூகம் என்ற சிறுகுழுக்கள்!
சண்டைகள் வருமே அவற்றுக்குள்ளும்
சிறியவர் பெரியவர் யாரென்று,
வெல்பவர் தோற்பவர் யாரென்று,
தோற்கும் கூட்டம் ஓடிவிடும்
வெல்லும் கூட்டம் இடத்தைப்பிடிக்கும்!
மனிதன் என்ற மானிடனும்
எறும்பைப்பார்த்துக் கற்றானோ?
சிறுசிறு சமூகம் தனக்குள்ளே
அமைத்துக்கொண்டு வாழ்வதும்,
போரும் சண்டையும்,
அழிக்கும் எண்ணமும்,
இடத்தைப் பிடிக்கும் தீங்குணமும்?
சுற்றுச்சூழல் என்றொரு கூட்டம்,
மரத்தை வெட்டும் மற்றொரு கூட்டம்!
கருணை வளர்ப்போம் என்றொரு கூட்டம்,
விலங்கை வதைக்கும் இன்னொரு கூட்டம்!
மானிடர் என்றால் அடிப்படைத் தேவை
'சுதந்திரமம்மா சுதந்திரமே'!
சொல்லிக்கொள்ளும் அதே கூட்டம்
அடிமைப்படுத்தும் மற்றோரை!
முரண்பாடு என்றால் அர்த்தம் யாது?
மனிதனம்மா மனிதனே!
Comments
Post a Comment