சிந்தனையில் சுயம்
சிந்தனையில் சுயம்
கல் என்றாலும் கணவன்
புல் என்றாலும் புருஷன்.
யாரோ ஒருவர் சொன்னாராம்
வேதம் என்று நினைத்தாளாம்.
ஊரும் அதையே நினைத்ததுவாம்
கணவன் ஒருநாள் மாண்டானாம்
அவன் தீயில் அவளும் இறந்தாளாம்.
கல்லும் புல்லும் துணை கொண்டு
வாழ்க்கை நடத்த இயலாது
என்ற ஞானம் இருந்திருந்தால்,
கொஞ்சம் சிந்தனை செய்திருந்தால்,
கல் போனாலும் புல் போனாலும்
அவளது வாழ்க்கை இருக்கிங்கே,
வாழ்ந்து தானதை பார்க்கட்டுமே
என்றும் ஊரும் விட்டிருக்கும்
அவளும் வாழ்ந்து பார்த்திருப்பாள்.
வாழ்வின் குறியே பணம் என்பார்
பள்ளிக் கல்வியும் அதற்கென்பார்
பெரியோர் சொன்னால் கேளென்பார்
சொன்னபடி நடவென்பார்..
இவர் ஏதோ சொல்வார்
அவர் ஏதோ சொல்வார்
ஆகையினாலே திருமணஞ்செய்,
ஊர் என்ன சொல்லும்
நாடென்ன சொல்லும்
அதனால் குழந்தை பெற்றுவிடு
இதுவே நமக்கறிவுரையாகும்..
யார் என்ன சொன்னாலும்
ஊர் என்ன சொன்னாலும்
மனம் என்ன சொல்லுது
கேள் கண்ணே
உன் மனம் என்ன சொல்லுது கேள் கண்ணே!
சிந்தனை செய்து பார் கண்ணே
சுயமாய்
சிந்தனை செய்து பார் கண்ணே!
👇🏼
நாலு பேர் என்ன சொல்லுவாங்க..
இதுக்காகத்தான் பெரியவங்க அன்னைக்கு சொல்லி வச்சாங்க..
தெரியாமலா சொன்னாங்க மூத்தோரெல்லாம்..
பெரியவங்க சொன்னா கேட்டுக்கணும்'..
இன்னும் இது போல் எத்தனையோ நாம் அன்றாடம் கேட்கிறோம்.
கேட்டுக் கேட்டுப் பழகிவிட்டதால் இவையெல்லாம் சரி என்று தோன்றுகிறது நமக்கு.
இதுபோன்ற வசனங்கள் நம் மூளையயை மழுங்க வைத்து, சிந்திக்க விடாமல் செய்கின்றனவோ?
யார் அந்தப் பெரியவர்களும் மூத்தவர்களும்? நம்மைப் போல இருந்தவர்கள் தானே அவர்களும்?
அவர்கள் சொல்லிவிட்டு போனதெல்லாம் சரி என்றால் நாம் சொல்வதும் சரிதானே?
அந்தப் பெரியோர்களை நான் குறைத்து மதிப்பிடவில்லை. அவர்கள் அனுபவத்திற்கு அவர்கள் சிலதை சொன்னார்கள்.....
நாம் நம் வாழ்க்கை அனுபவத்திற்குத் தகுந்தார்போல் சிந்திக்க வில்லை என்றால் சொந்தமாக மூளை எதற்கு?
அம்மா அப்பா பேச்சைத் தட்டாமல் கேட்க வேண்டும் என்று குழந்தைகளை வளர்ப்பது அவ்வளவு சரியல்ல என்று எனக்குப்படுகிறது.
நம் கருத்தைக் கூறி விட்டு அவர்களை சிந்திக்க விடலாம்.
சொந்தமாகச் சிந்திக்கும் பழக்கம் அவர்கள் வாழ்க்கைக்கு இன்னும் உரமூட்டும் என்பது என் கருத்து.
Comments
Post a Comment