திருமணம்
திருமணம் 😍🤩
இருமனம் கலந்து
பின் வரும் திருமணம் ...
அவ்விரு மனங்கள்
ஒரு மனமாகி,
அவ்வொரு மனத்தின்
எண்ணம் போலவும்,
நல்லறத்துடனும்,
இல்லறம் நடத்த
ஒரு மனதுடன்
வரைந்து வந்த ஒப்பந்தம்.
அந்தத் திருமணவிழாவினிலே
அவ்விரு மனத்துடன்
வேறு எம்மனமும்,
இருக்கத் தேவை இருக்கா?
இருமனம் சேர்ந்து இருக்கென்றால்,
கைபேசி தொலைபேசி
பல பேசியுடனே
ஊடகமென்றும் இத்தனை இருக்க
புத்தகம் ஒத்த அழைப்பிதழெதற்கு?
மாநாடொத்த கூட்டம் சூழ
தெருவைச் சேரும் ஊர்திகளும்
வீணாய் வெளியே வீசிக் கொட்டும்
அளவில்லாத உணவுப்பொருளும்,
நினைக்கும் நெஞ்சம் பதறும்
நெகிழித் தண்ணீர் குப்பிகளும்............
புதிய வாழ்வின் முதல் அடியே
பூமித்தாயின் நெஞ்சில் அடிப்பது
நலமென்று கூறல் எங்கனம்?
சுற்றுச்சூழல் கெட்டு, ஆட்டம் கட்டுது அடித்தளம் -
பூமித்தாயின் அடித்தளம்..
அடித்தளத்தை நிலைநிறுத்த
புத்தக அழைப்பைப் புறக்கணித்து
பசுமைவுலகம் படைக்க வாரும்
புத்தம் புதிய ஜோடிக் கண்களே! 🚴
👇🏼
கலாச்சாரம் சம்பிரதாயம் என்ற
பெயரில் கொஞ்சம் கொஞ்சமாக அந்த சம்பிரதாயத்தை விட்டு விலகி வெறும் ஆடம்பரம் ஆகிவிட்ட பல நிகழ்ச்சிகளில் ஒன்றாக இந்தக் கால திருமணங்கள் ஆகிவிட்டனவோ?
கடந்த பத்துப் பதினைந்து வருடங்களாக நான் சென்ற எந்தத் திருமணத்திலும், திருமணத்திற்கு வந்திருந்தவர்களில் பெரும்பாலோர் மணமான புது ஜோடியைப் பார்க்கவும் இல்லை வாழ்த்தவும் இல்லை.
வந்து அமர்ந்து , உடனே உணவு அறைக்குச்சென்று 'சுய சேவை' என்ற பெயரில் நடக்கும் உணவு விழாவில் பாதிக்குமேல் தட்டில் எடுத்துக் கொஞ்சம் மட்டும் அருந்தி விட்டு, மீதத்தைக் குப்பைத் தொட்டியில் கொட்டி விட்டுச் சென்றுவிடுவார்கள்.
செய்யப்படும் அத்தனை பதார்த்தங்களையும் ருசி மட்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் பலருக்கு இருக்கிறது, மீதத்தை வைத்துவிடுவார்கள். பதார்த்தங்களும் ஒரு இருபது இருபத்தைந்துக்குமேல் இருக்கும் ஒவ்வொரு உணவு வேளைக்கும்.
வந்திருக்கும் மக்களில் முக்கால்வாசிப் பேருக்கு பெண்ணையும் மாப்பிள்ளையையும் தெரியாது.....சொந்தமும் அல்ல வேறு ஏதேதோ காரணங்களுக்காக அழைக்கப்படுபவர்களும் இருக்கிறார்கள்,பெற்றோர்களின் தொழில் சம்பந்தப்பட்டவர்கள் என்று.....
எனக்குப் பல நேரங்களில் என்ன தோன்றுகிறது என்றால் திருமண ஜோடியையே பார்க்காத இவர்கள் எதற்காக அழைக்கப்பட்டார்கள் என்பது புரியவில்லையே என்று!
மேலும் இதுபோன்ற விழாக்களில் ஒரு இரண்டு நாட்கள் அந்த தெருவில் வாகனங்கள் போவது மிகவும் சிரமமாக இருக்கும், சாலையில் செல்லும் பலருக்குக் கோபமும் வரும்.
ஒருவேளை சாலையில் செல்வோர் கோபப்படும் அளவுக்கு கூட்டம் வந்தது என்பதும் ஒரு அந்தஸ்தின் அடையாளமோ?🤔🤗
ஒரு திருமண விழா என்பது பல உள்ளங்களின் வாழ்த்துக்களைப் பெற்று ஆரம்பமாக வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
அப்படி இல்லாமல் இவ்விழாவை குறித்து
சாலையில் செல்லும் பல நபர்கள் கோபம் அடையும் அளவுக்கு நடப்பது நலமா?
திருமண ஆடம்பரத்தினால் ஒரு ஆட்சியே கவிழ்ந்தது, அதை மறந்திருப்பார்களோ அனைவரும்?🤔
திருமண மண்டபத்தின் பின்புறம் லாரி லாரியாக எடுத்துச்செல்லப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் வேறு.
மற்றும் காரில் வந்திருக்கும் விருந்தினர்களின் கார் டிரைவர்கள் அனைவரும் மிகவும் சிரமப்பட்டு தான் காரை நிறுத்தவும், திரும்ப எடுக்கவும் முடியும். ஏனென்றால் கார் நிறுத்தம் பூராவும் வண்டிகளால் அடைபட்டிருக்கும்.
அந்த டிரைவர்கள் எரிச்சலடைவதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன்.
பல நேரங்களில் நம்முடைய பல வீடுகளில் கேட்கும் வசனம் என்னவென்றால் 'கூப்புட்டாங்க, அங்க போயி தலைய காமிச்சிட்டு வந்தர்றேன்'
இந்தத் தலைகள் தேவையா அந்தப் புது ஜோடிக்கு?
ஆகையால் சமீபத்தில் நான் ஒரு முடிவு செய்து இருக்கிறேன் அந்தத் தலைகளில் ஒன்றாக நான் இருப்பதில்லை என்று.
😊
Comments
Post a Comment