எல்லை
எல்லை
நாடும் எல்லையும் பிரித்தவர் நாமே,
தேசமும் கண்டமும் வகுத்தவர் நாமே!
யார் கொடுத்த உரிமை இது?
நாமே எடுத்துக் கொண்டது!
சேர சோழ பாண்டியம்
வடக்கில் வந்த மௌரியம்
இடையில் இருந்த களப்பிரம்
கிழக்கில் இந்த வங்கம்
மேற்கில் அந்த ஆரியம்
ஜெயித்து வந்த முகலாயம்
ஏய்த்தமர்ந்த ஆங்கிலம்
உருவானதொரு இந்தியா
பிறகிணைந்த சிக்கிம்
கடையில் வந்த காஷ்மீரம்
அனைத்துமின்று பாரதம்!
ஒன்றாய் இருந்த ருஷ்யா
பிரிந்து போனதங்கே,
தனித்தனி நாடென்ற ஐரோப்பா
சேரும் பிரியும் சேரும் பிரியும்
சிற்சிலசமயம் சிற்சில சமயம்
ஏனைய உயிர்கள் யாவும்
இருப்பதை உண்டு உறங்கி மகிழ்ந்து,
காலத்திற்கேற்ப இடம்தனை மாற்றி,
அலைந்து திரிவன பூமியெங்கும்,
எதுவும் தனக்கு சொந்தம் அல்ல
அறிவன அந்தப் பேரினங்கள்.
மனிதன் மட்டும்
பிரிக்கின்றான் சொந்தமான பூமி என்று,
கல்லில் வீட்டைக் கட்டுகின்றான் நிலையாய் இருக்கும் என்றெண்ணி,
மறந்துவிட்டான் அவனுமே,
தானே நிலை இல்லை என்று!
ஐந்தறிவென்பான் விலங்குக்கு
ஆறறிவென்பான் தனக்கு
யாருக்கு எதுவென்று புரியவில்லை எனக்கு !
😁
👇🏼
எந்தவிமான கட்டுப்பாடும் தடைகளும், எதுவும் இல்லாமல் சுதந்திரமாக மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய வாழ்க்கையை நாமே மிகவும் சிரமமாக மாற்றிக் கொள்கிறோமோ?
என்ற எண்ணம் அடிக்கடி எனக்கு எழும்.
இன்று சோஷியல் மீடியா மூலம் உலகம் பூராவும் அந்தந்தக் கணத்திலே தொடர்பு கொள்ளக்கூடிய சவுகரியங்கள் பல இருக்கின்றன...
நான் நினைத்ததை நாம் நினைப்பதை உடனே மற்றவருக்குத் தெரிவிக்கும் உபகரணங்கள் இருக்கின்றன, அவர் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் ...
உலகில் மற்ற எல்லா மனிதர்களுடனும் என்றும் தொடர்பில் இருக்கிறோம்.
ஆனால் ஊரும் நாடும் வேறு வேறு, நினைத்தால் எங்கும் போக முடியாது என்றதொரு
நிலையும் இருக்கிறது..
சில நேரங்களில் வேறு நாட்டுக்கு சென்று விட்டால் திரும்புவது கடினம்...
வீசா போன்ற விஷயங்கள் இருக்கின்றன.
நம் சமூக அமைப்பு ஒழுங்காக இருப்பதற்கும் அடிப்படையிலேயே மனிதனுக்கு உண்டான சண்டைபோடும் குணத்தினால் பெரிய பிரச்சனைகள் வராமல் இருக்கவும் இந்த சட்ட திட்டங்கள் தேவை தான்
இருந்தும் உலகத் தலைவர்கள் எண்ணப்படி அவர்கள் ஆசையை நிறைவேற்ற பல போர்கள் வந்தவண்ணம் இருக்கின்றன அந்தக் காலத்திலும் சரி இந்தக் காலத்திலும் சரி.
என்றாவது ஒருநாள் இயற்கை மனிதனையும் விலங்கினை போல குணத்தினை மாற்றினால் நன்றாக இருக்கும் என்னைப்பொறுத்தவரை.
😀
பாரதத்தின் சரித்திரத்தை நயம்படவும் அழகாகவும் எடுத்துரைத்தீர் - அற்புதம்!
ReplyDeleteநன்றி ஐயா
Delete