மழை
கடலம்மா நீரைக்
கனிவுடன் வாங்கி
நீராவியாகி
மேலே சென்று
மேகத்திலமர்ந்து
காலம் கனிந்ததும்
கார் மேகமாகி
கருணையில் பொழியும்மழையே!
உன் ஓசை கேட்டு உற்சாகம்
உள்ளம் எங்கும் பொங்குதே
பச்சைப் புல்வெளி மரங்கள் யாவும்
பளீரென நகைக்குதே
நீ காற்றைக் கழுவி
பூமியில் இறங்கி
ஏதேதோ செய்கின்றாய்
எங்களைக் காக்கப் பார்க்கின்றாய்.
ஆனால் நாங்கள் மனிதர்கள் 🦸
ஆறு அறிவு படைத்தவர்கள்!
அவ்வளவு சுளுவில் விட மாட்டோம்
ஆட்டம் கட்டி இறுதியில் ஓய்வோம் .
நீ செல்லும் பாதை அடைப்போம்
பூமியை நெகிழியில் மறைப்போம்
வரும் நீரெல்லாம் வீணாக்கியபின்
வெள்ளத்தில் முழுகி மடிவோம்.
இனிமேல் மழையே நீ
மனிதன் இல்லா இடங்களிலே
மலையை நனைத்து
மரத்தைக் காத்து நுண்ணுயிர்
பல்லுயிர் அனைத்தும் காத்து
உன் அருமை காக்க முயல்வாயே 🙏.
👇🏼
பருவமழை காலத்தில் இந்த வருடம் ஓரளவு மழை பெய்து கொண்டிருக்கிறது. பிற்பகல் நேரம் மேகம் கவிய ஆரம்பித்தால் மாலை நேரம் நல்ல மழை.
மழை சத்தத்துடன் சில நேரங்களில் சூடான தேனீரும் இருக்கும்.
அதனுடன் வறுத்த பொரியும் எப்போதுமிருக்கும்.
மழை நீரை நாம் சேமிக்காமல் விடுவதுடன் அது இயல்பாக போகக்கூடிய பாதைகள் எல்லாம் அடைத்து வைத்திருக்கிறோம்.
நமக்கு எப்போது அறிவு வளர்ந்து இயற்கையோடு ஒன்றிய வாழ்வு வாழ்ந்து மழையை அதன்போக்கில் போகவிட்டு , நாமும் நன்றாக இருந்து உலகையும் நன்றாக வாழ விடுவோம் ? சில நேரங்களில் ஆயாசம் வருகின்றது.
நம்மைக் காக்கும் மழைக்காக ஒரு சின்ன பாடல்.
Comments
Post a Comment