குழந்தை
குழந்தை
சின்னச் சின்ன குழந்தைகள்
துள்ளிக்குதித்து விளையாடப் பலவிதமான பொம்மைகள் ,
பார்த்துப் பார்த்து படிக்க வண்ணவண்ண புத்தகம் ,
தள்ளிப் பார்த்து விளையாட
சிறிய பொம்மை வண்டிகள் ,
சின்னக் குழந்தை மூளையது சுறுசுறுப்பாக இயங்க
பொம்மைப் புதிரும் இங்கே உண்டு !
தூங்கும் நேரம் போக சும்மா இருத்தல் ஆகாது
கேட்டுக் கொள்ளு தங்கமே
ஆணையிட்டாள் அன்னையே !
அந்தக்கால குழந்தைக்கு
அதிகமில்லை பொம்மை, இருக்கும் பொருளை கொண்டு கற்பனை பொம்மை செய்திடுமே
அண்ணன் தம்பி அக்கா தங்கை குடும்பமென்று விளையாடும்
எதுவும் இல்லை என்றாலும் கற்பனை ஆட்டம் ஆடிடுமே
அதுவும் இல்லை என்றாலும் உறங்கிப் போகும் குழந்தையே !
பொம்மை வாங்கக் காசில்லை காசிருந்தாலும் பொம்மைக்கில்லை
ஏதோ ஒன்று நீயே ஆடு
அன்று அன்னை ஆணை !
மூளை என்றும் சுறுசுறுப்பாய் இயங்கிக்கொண்டே
இருத்தல் நலமா ?
அவ்வப்போது சில சமயம் சும்மா
இருத்தலும் நலமேயாகுமா?
மனதில் மகிழ்ச்சி தங்கயிருக்க
பொருட்கள் என்றும் தேவையா ?
எதுவும் இல்லை என்றாலும் மகிழ்வாய் இருத்தல் ஒரு குறையா?
சுயமாய் இருக்கப் பழகும் குழந்தை எதுவாயிருக்கும் இங்கென்று
சிந்தனை செய்தால், பதில் என்ன?
அவரவர் மனம் சொல்லும் பதிலே
அந்தப்பதிலே சரியாய் இருக்கும் !
👇🏼
ஒவ்வொரு காலகட்டத்திலும் குழந்தை வளர்ப்பு ஒவ்வொரு விதமாய் இருக்கும்.
அவரவர்க்கு தங்கள் காலமே சிறந்தது என்ற ஒரு நினைப்பும் இருக்கும்.
இந்தத் தலைமுறை குழந்தைகளுக்கு அவர்களை சதா இயங்கிக்கொண்டே இருக்குமாறு நிறைய பொம்மைகள் புத்தகங்கள் அறிவை வளர்க்கும் சாதனங்கள் நிறைய உண்டு.
உறங்கும் நேரம் போக எல்லா நேரமும் குழந்தைகள் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்று தாய்மார்கள் விரும்புகிறார்கள்....
அவரவர் வசதிக்கு தகுந்தவாறு நிறைய பொம்மைகளும் புத்தகங்களும் வாங்கித் தருகிறார்கள்.
பள்ளி செல்ல ஆரம்பித்த பிறகும் விடுமுறைகளை கேம்ப் என்றும் கிளாஸ் என்றும் சேர்த்துவிடுகிறார்கள்...
ஒருவேளை இதெல்லாம் நல்ல பழக்கமாகக் கூட இருக்கலாம்
இயல்பிலேயே கொஞ்சம் சோம்பேறியான எனக்கு மிகவும் மலைப்பாக இருக்கிறது இதெல்லாம்.
கொஞ்சம் செயற்கையாய் திணிப்பது போலவும் இருக்கிறது, நான் நினைப்பது சரியா என்று எனக்கே தெரியவில்லை.
ஆனால் ஒரு விஷயம் இப்பொழுது ஞாபகத்துக்கு வருகிறது, நானும் என் தங்கையும் விடுமுறைக்கு எப்பொழுதும் ஒரு பத்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ள எங்கள் சித்தியின் இல்லத்திற்குத் தான் போவோம். நான் ஏழாவது படிக்கும் பொழுது ஒரு முறை..... அங்கு ஒரு ரப்பர் பொம்மை, ஒரு ஒன்றரை அடி உயரம் இருக்கும் ஒரு சிறு பையனின் பொம்மை அது, கைக்கு அடக்கமாய் இருக்கும்.
நான் தினமும் அதைக் குளிப்பாட்டி பவுடர் போட்டு, சித்தியின் மகன்,என் குட்டித் தம்பியின் உடைகளை பொம்மைக்கு அணிவித்து பொம்மையை எப்பொழுதும் என் அருகில் வைத்துக் கொள்வேன்.
இரவிலும் பொம்மையை என்னருகில் தான் படுக்க வைத்துக் கொள்வேன். மிகவும் ஆறுதலாக இருக்கும் அப்பொழுது. உண்மையான குழந்தையே அருகில் இருப்பது போல!
Comments
Post a Comment