Agatha Christie
Agatha Christie
ஆங்கில எழுத்தின் மர்மத் தலைவி அகதா கிறிஸ்டி என்றொரு பெண்மணி.
அவர் வாழ்க்கையிலும் ஒரு மர்மம்,
அதை உடைக்கவில்லை
அவர் இறுதிவரை!
எழுதிய கதைகள் எழுபத்தைந்து,
எடுத்துப் படிக்கலாம் திரும்பத்திரும்ப,
மீண்டும் படிக்கலாம் அடுத்த ஆண்டும்!
ஒரு முறை விளங்கிய மர்மம் மறுமுறை படிப்பது எப்படியோ?
அதுதான் அகதா கிறிஸ்டி!
முதல் முறை முடிச்சுகள் அவிழும் தெளிவாக.....
மறுமுறை மீண்டும் முடிந்து கொண்டிருக்கும் அழகாக!
அந்த முடிச்சில் இல்லை அவர் அருமை
கதா பாத்திரமமைப்பதில் வந்தது அப்பெருமை.
கதைகளில் வரும் ஆணும் பெண்ணும்
நம் வாழ்விலும் இருப்பார் முன்னும் பின்னும்!
அகதா எழுதிய புதினங்களில்,
துப்பறிவாளர் போய்ரோவும்
மார்ப்பில் என்ற ஆத்தாவும்
அவிழ்த்து விட்ட முடிச்சுகள்
மனதில்மீண்டும் முடிந்து கொள்ள
வருடம் ஒன்றே போதும்..
அதனாலேயே அவர் கதையை
மீண்டும் மீண்டும் படிக்கலாம்
திரும்பத் திரும்ப சுவைக்கலாம் !
எனக்குப் பிடித்த மார்ப்பிலும்
துப்பறிவாளர் போய்ரோவும்
மறக்க இயலா மாந்தர்கள்
அவரவர் குணத்தின் மகிமையினாலே!
அகதா கிறிஸ்டி என்ற பெயர்
அன்னை தந்த பெயராகும்,
புனைப்பெயர் ஒன்றில் எழுதினாரே...
புதினங்கள் ஆறு முத்துக்கள் போல!
மனிதன் மனதின் ஆழம்
அவனே அறியா விந்தை,
அதிலே தோன்றும் எண்ணங்கள்
அதனால் விளையும் செய்கைககள்
அனைத்தும் புதிரே யாருக்கும்...
ஆனால் அதையும் சொன்னார் அக்கா,
அன்றே கதைகள் ஆறில்!
எழுதிய புனைப் பெயர் என்னவென்றால்
Mary Westmaccott!
2️⃣9️⃣
👇🏼
சில வருடங்கள் முன்பு வரை கதை புத்தகம் படிப்பது என்றால் எனக்கு பைத்தியம்.
கிட்டத்தட்ட எல்லா நேரங்களிலும் ஒரு புத்தகத்துடன் இருப்பேன்.
திருமணமான புதிதில் நாங்கள் பாம்பேயில் குடியிருந்தோம் என் கணவர் பிஎச்டி படித்துவந்த இன்ஸ்டிட்யூட்டில் ஒரு லைப்ரரி இருந்தது.
நிறைய கதைப் புத்தகங்கள் கிடைக்கும் இரண்டு நாளுக்கு ஒருமுறை ஆளுக்கொன்று கொண்டுவந்து அறையில் உட்கார்ந்து எந்நேரமும் படித்துக் கொண்டிருப்போம்
முக்கால்வாசி அகதா கிறிஸ்டி புத்தகங்கள்தான்.
பிறகு ஒரு பத்து வருடம் கழித்து மீண்டும் அத்தனை புத்தகங்களையும் ஒரு முறை படித்தேன். அதன் பிறகு வருடம் ஒரு முறை எல்லா புத்தகங்களும் கிட்டத்தட்ட ஒரு புத்தகம் மூன்று நான்கு முறை படித்து விட்டேன்.
இந்த சில வருடங்களாக புத்தகம் படிப்பது குறைந்து இருக்கிறது.... வயதாகிவிட்டதால் என்று நினைக்கிறேன்.
எனக்கு அகதா கிறிஸ்டி புத்தகங்கள் படிப்பது அந்த மர்மம் என்னவென்று தெரிந்துகொள்ள மட்டுமல்ல......அது பார்க்கப்போனால் ஒரு சின்ன விஷயம்.
அவருடைய கதைகள் மிகவும் தத்ரூபமாக இருக்கும் கிட்டத்தட்ட நம் வாழ்க்கையில் நடப்பது தான் எனத் தோன்றும் பலமுறை.
அவருடைய சுய சரித்திரம் படித்திருக்கிறேன்.
அவரிடம் எனக்கு மிகவும் பிடித்தது அவருடைய ஞானம்.
அடிப்படை மனித இயல்பு மாறாது என்பது அவருடைய கருத்து..... எனக்கும் அது சரி என்று தோன்றுகிறது பலநேரம்..
Comments
Post a Comment